டாக்டர். நிவேதா பாலசுப்ரமணியம்

பாரத நாடு விரைவில் உலகின் வல்லரசாகும் என்ற நம்பிக்கை ஒவ்வொருதேசபக்த உள்ளங்களிலும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. சாப்ட்வேர் துறையில் இந்திய இளைஞர்களின் தாக்கம் உலகளவில் உயர்ந்து வருகிறது. பொருளாதாரத்தில், கல்வியில், மருத்துவத்தில் என்று அனைத்து துறைகளிலும் நம் நாடு வேகமாக முன்னேறி வருகிறது. நாடு முன்னேறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த முன்னேற்றத்தை அனுபவிக்க நாமும், நமது வருங்கால சந்ததியினரும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்போமா என்பது தான் கேள்விக்குறி.

நமது முன்னோர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியையும் திட்டமிட்டு வாழ்ந்தனர். அவர்களின் உணவு பழக்கம் சுவையைச் சார்ந்ததாக இல்லாமல், ஆரோக்கியத்தைச் சார்ந்ததாக இருந்தது. நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர்.

ஆனால் தற்போது அதிக பணம் சம்பாதித்தால் தான் தானும் குடும்பத்தாரும் சந்தோஷமாக வாழ முடியும் என்று கூறி, அவசர கால வாழ்க்கையில் சத்தான உணவுக்கு நேரமில்லை, சற்று நேரம்குடும்பத்துடன் அன்பாக பேசுவதற்கு நேரம் இல்லை என்று பணம் பணம் என்று ஓடுபவர்கள் தான் அதிகம்.

தேவையான பணத்தை சம்பாதித்துவிட்டு திரும்பி பார்த்தால், வாழ்க்கையின் பெரும்பகுதி கழிந்துவிட்டிருக்கும்.

மகன், மகளுடன் ஆசையாக நாலு வார்த்தை பேசலாம் என்று நெருங்கி போனால், அவர்கள் தற்போது ‘நாலு காசு சம்பாதிப்போம்…’என்று ஓடத்தொடங்கிவிட்டிருப்பார்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. குடும்பத்தில் ஒருவர் பெரும்நோயில் வீழ்ந்துவிட்டால், அந்த குடும்பத்தின் நிம்மதி,பொருளாதாரம் எல்லோமே வீழ்ந்துவிடும்.

எவ்வளவு பெரியதிறமைசாலியாக இருந்தாலும் நோயில் வீழ்ந்துவிட்டால் அவரது திறமைதற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ செயலிழந்துவிடும்.

வாழ்க்கையைச் சற்று திட்டமிட்டுவிட்டால் நிரந்தர உடல்

ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

நமது பாரத நாடு பழங்காலத்தில், வேதகாலத்தில் மருத்துவ முறையில் மிகவும் முன்னேறி, முதன்மையாகவும், பிறருக்கு முன்னோடியாகவும் இருந்தது. சித்தர்கள் ரிஷிகள், யோகிகள் நம்மை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், வலுவாகவும், பலமாகவும் இருப்பதற்கும், நோய்வராமல் இருப்பதற்கும், நோய் வந்துவிட்டால் குணப்படுத்துவதற்கும் பல முறைகளை வகுத்துள்ளனர்.நோய் வருமுன் காப்பதே சாலச்சிறந்தது. எனவே நோய் வராமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நமது முந்தையர்கள் தங்கள் அனுபவத்தாலும், ஆழ்ந்த அறிவாலும் காட்டிய நெறிமுறைகள் படி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்:

1.துயில் எழுதல்:

சூரியன் உதிக்கும் முன்பாக எழுந்து நமது காலைக்கடன்களை முடித்துசூரிய உதயத்தை வரவேற்க தயாராக வேண்டும். அதாவது பிரம்ம முகூர்த்தத்தில்  (அதிகாலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள்) எழுதல் என்பது சரியானது.

இதன் பயன்கள்:

  • உடலின் சக்தியை கூட்டவல்ல ஒசோன் படலம் சூரிய உதயத்திற்கு முன்பு பூமியை சுற்றி படலமாக இருக்கும். இச்சமயத்தில் எழுந்து நமது வேலைகளைச் செய்யும் போது இயற்கையாகவே உடலினுள் சென்று உடலின் இயல்பான வேலைகளை ஊாக்குவிக்கிறது.
  • உடலின் பிஎம்ஆர் அதாவது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து தேவையற்ற ஊளைச்சதை தேங்குவதை தவிர்க்கிறது.
  1. உஷாபானம்:

மண்பானை (அ) செம்புபானையில் இரவு தண்ணீர் ஊற்றி வைத்து அதில் 2 துளசி இலைகளை போட்டு வைக்க வேண்டும். காலை எழுந்தவுடன் 250முதல் 500 மில்லி வரை அந்த தண்ணீரை சப்பிக்குடிக்க வேண்டும். இதன்பலன்:

  • முழு ஜீரண மண்டலத்தையும் உமிழ்நீருடன் கலந்து சுத்தப்படுத்துகிறது. பெருங்குடலின் உந்து சக்தியை அதிகரித்து எளிதில் மலம் வெளியேறுகிறது.
  • உடலின் அமிலத்தன்மை சீர்படுத்தப்படுகிறது.

 

  1. பல்துலக்குதல்:
  • இரவு உறங்கும்போது எச்சில் விழுங்குதல் நிகழாத காரணத்தால் அதிகப்படியான அமிலம் பல் இடுக்குகளில் தேங்கியிருக்கும். இவையே பல்சொத்தைக்கு வழிவகுப்பது. இதனை காரத்தன்மையுடைய துவர்ப்பு, கசப்பு சுவை உடையவற்றின் மூலமே முழுமையாக சுத்தம் செய்ய முடியும். இதற்கு கருவேலன் அல்லது வேப்பங்குச்சி உகந்தது. பற்பொடிகளையும் பயன்படுத்தலாம்.
  • விளம்பரங்களில் வரும் பற்பசை, மிகவும் நுண்ணிய பவுர்கள், இனிப்பு, புளிப்பு சுவை உடையவைகளாகவே அதாவது அமிலத்தன்மையுடையவையாகவே இருக்கின்றன. வாயில் ஒருவித சுறுசுறு உணர்ச்சியையும், வாசனையையும் தருபவையாக இருக்கிறது. ஆனால் பல்லை சுத்தம் செய்து அதன் எனாமலை காப்பவையா என்பது கேள்விக்குறியே!
  1. நாக்கு சுத்தம் செய்தல்
  • அமிலத்தன்மையின் வெளிப்பாடாக நாக்கில் வெள்ளை (அ) மஞ்சள்நிறத்தில் ஏடு படிந்திருக்கும். இது நாக்கில் உள்ள ருசி மொட்டுக்களை போர்த்தியிருப்பதால் ருசியின்மை, சரியான குசியை அறிய முடியாமை,உணவில் நாட்டமில்லாமல் இருக்கும். இதற்கு இளந்தென்னங்கீற்றுகுச்சியை வளைத்து தாக்கு வழிப்பானாக பயன்படுத்தலாம். இது ருசி மொட்டுக்களை காயப்படுத்தாமல் நாக்கில் படிந்திருக்கும் ஏட்டை நீக்கிவிடும். மாறாக பிளாஷ்டிக், தகரம் பயன்படுத்தினால் ருசி மொட்டுக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

நாக்கு மசாஜ்:

  • நாக்கை முன்பின் நீட்டி மடக்குதல், சுழற்றுதல், கையால் இதமாகவட்ட வடிவில் சில நிமிடங்கள் மசாஜ் செய்தால் நாக்கில் ரத்த ஓட்டம் அதிகரித்து ருசி மொட்டுக்களின் ஆரோக்கியம் காக்கப்படும்.

நல்லெண்ணை கொப்பளித்தல்:

செக்கில் ஆட்டிய நல்லெண்ணையை 3 டீஸ்பூன் வாயில் ஊற்றி 10-15நிமிடம் வரை கொப்பளிக்க வேண்டும். எண்ணை நுரையாகியவுடன் கீழே உமிழ்ந்து விடலாம்.

இதனால் கபம் சீர்படுத்தப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி, ஜீரண சக்தி அதிகரிக்கிறது. கண்பார்வை. கோளாறு,காதடைப்பு, சளிபிடித்தல் போன்றவை சீர்படுத்தப்படுகிறது.

  1. கண்ணை சுத்தம் செய்தல்
  • கைகளில் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொண்டு அதனுள் கண்களை திறந்து பார்த்தல். இதை 1 முதல் 3 நிமிடம் வரை செய்யலாம். இதனால் கண் எரிச்சல், வறட்சி, பார்வை மங்குதல், கிருமி தொற்று, நீர்வழிதல் ஆகியவற்றிலிருந்து காக்கிறது.
  1. குளியல்:
  • சூரிய உதயத்திற்கு முன்பாக குளித்தல் மிகவும் நல்லது. இது உடல்சூட்டைத் தணித்து புத்துணர்வை ஏற்படுத்தும்.
  • குளிப்பதற்கு இயற்கையான பயத்தமாவு அல்லது கடலை மாவு பயன்படுத்த வேண்டும்.பூலாங்கிழங்கு, மஞ்சள் கலந்து உபயோகிப்பதன் மூலம் கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.
  • சோப்பு வறட்சியை ஏற்படுத்தும்.
  • வாரத்திற்கு இரு முறை எண்ணை தேய்ந்து குளிக்க வேண்டும்.
  1. உடற்பயிற்சி:

தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடம் அனைத்து உடல் பகுதிக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கு சிறந்தது யோகாவாகும். அவரவர் உடலுக்கும், தன்மைக்கும் ஏற்றவாறு தகுந்த இயற்கை மற்றும் யோக ஆசிரியரின் ஆலோசனைப்படி பயிற்சிகள் செய்வது பாதுகாப்பானதாகும். டிவியில் பார்த்து செய்வதால் சரிசெய்ய முடியாத பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

  1. வழிபாடு;

தினமும் காலை மாலை வேளைகளில் வழிபாடு செய்தல் மனதை சுத்தப்படுத்துவதுடன் தீய எண்ணங்கள் வளரவிடாமலும் தடை செய்யும்.வழிபாடு நம்மை பலப்படுத்துவதாக அமைய வேண்டும். வழிபாட்டின் மூலம் மன அமைதி பெற்று நாள் முழுவதும் புத்துணர்வுடன் பணியாற்ற முடியும்.

  1. உணவு:
  • காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் எளிதில் ஜீரணமாக் கூடிய திரவ உணவு உண்பது சாலச்சிறந்தது. ராகிக்கூழ், கம்மங்கூல், பழங்கள், காய்கறிகள் சாப்பிடலாம்.
  • மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் சாதம் சாப்பிடலாம்.

அரிசி சாதம்,பருப்பு, காய்கறிகளுடன் மதிய உணவு இருந்தல் நலம்.

  • இரவு 7 மணியிலிருந்து 9 மணிக்குள் எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவாக உண்பது நல்லது. குறிப்பாக ஆவியில் வேக வைத்த உணவுகள் ஏற்றது. உணவு உண்டபின் 1 1/2 மணிநேரம் கழித்து படுக்க செல்ல வேண்டும். வயிற்றிலிருந்து ஜீரண குடலுக்கு உணவு 1 1/2 மணிநேரத்தில் சென்றுவிடும். வயிற்றில் உணவு இருக்கும் போது உறங்க சென்றால் அஜீரணக்கோளாறு ஏற்படும்.
  1. உணவுஉண்ணும்முறை

சாப்பிடும் போது பாதி ஜீரணம் வாயிலேயே ஆகும் அளவிற்கு நன்குமென்று உண்ண வேண்டும். சாப்பிடும் போது பேசுவதோ, டிவி பார்ப்பதோ, புத்தகம் படிப்பதோ கூடாது. உணவை வாயில் எடுத்து போடுவது முதல் வயிற்றுக்கு சென்று சேர்வது வரை பல உருப்புகள் ஒன்றாக இணைந்து பணியாற்றும். அதனால் மனதை சாப்பிடுவதில் நிலை நிறுத்த வேண்டும். இதற்கு மாறாக கவனத்தை சிதற விட்டால் உமிழ்நீர் சுரப்பது, உணவிலிருந்து சத்துக்களை உறிஞ்சி புதிய செல்கள் உருவாகுவது போன்றவை தடைபடும். அதனால் உணவை உண்பது எந்த அவசரமும் இல்லாமல் நிதானமாக சாப்பிடவேண்டும்.

  1. தண்ணீர்குடிப்பது:

தினமும் 6 முதல் 8 முறை சிறுநீர் கழிக்கிறோம். இதற்கும் மலம் கழிப்பதற்கும் குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீர் தேவை. வியர்வை மூலம் 500மிலி வரை தண்ணீர் வெளியேறுகிறது. மூச்சு வெளியிடுவது மூலம் 350மிலி வரை தண்ணீர் வெளியேறுகிறது. அதனால் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தாகம் எடுப்பதற்கு முன்பே நீர் பருக வேண்டும். சாப்பிடுவதற்கு அரை மணிநேரம் முன் பின் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீரை சப்பி குசித்து குடிக்க வேண்டும்.

  1. துயிலச்செல்லுதல்:

இரவு 10 மணிக்குள் துயிலச்செல்ல வேண்டும். தூங்குவதற்கு முன்புமனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். நாள் முழுவதும் நிகழ்ந்த நல்ல நிகழ்வுகளை மட்டும் அசைப்போடுங்கள். உறங்குவதற்கு முன்பு 15 முதல் 20 நிமிடங்கள் காலற நடந்து வாருங்கள். இஷ்ட தெய்வத்தை வணங்கிவிட்டு உறங்கத் துவங்கலாம். குறைந்த பட்சம் 6 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை தூங்கினால் நல்லது.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்க…

  • தினசரி ஒரு வேளையாவது குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடுங்கள்
  • வாரம் ஒரு முறையாவது உறவினர்களை சந்தித்துவிட்டு வாருங்கள்
  • குடும்பத்துடன் வாரம் ஒரு முறை கூட்டு வழிபாடு செய்யுங்கள்/ கோயிலுக்கு சென்று வாருங்கள்
  • அலுவலக வேலைகளை அலுவலகத்திற்குள்ளேயே முடித்துவிடுங்கள்.வீடுவரை வேலைகளையும், பிரச்சனைகளையும் கொண்டு வராதீர்கள்.அலுவலக வேலையை முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.
  • நமது தேசம், நமது பண்பாடு, நமது கலாச்சாரம், நமது மொழி, நமதுமதம் ஆகியவற்றை காக்கவும், அதன்படி நமது குடும்பம் வாழவும்  உறுதியாக இருங்கள்.